25 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் காணாமல் போன மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி தனியார் தொண்டு நிறுவனத்தினர் முயற்சியால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டிய மாநில மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
25 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் காணாமல் போன மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே, மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 75 வயதுள்ள மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் உப்பளத்தில் உள்ள ஒலந்தரியா முதியோர் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தினர் மூதாட்டியை மீட்டு கடந்த 2 வாரமாக உளவியல் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவர், தனது பெயர் ஜெயநூர். மராட்டிய மாநிலம் குரோ கிராமத்தை சேர்ந்தவர். தனக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக ரெயில் ஏறி பல இடங்களுக்கு சென்று புதுச்சேரி வந்தேன் என்று தொண்டு நிறுவன நிர்வாகியிடம் இந்தியில் கூறினார்.

அந்த மூதாட்டியை அவருடைய குடும்பத்தினருடன் சேர்ப்பதற்காக தொண்டு நிறுவன நிர்வாகிகளும், இவர்களுக்கு உதவியாக புதுச்சேரி பல்கலைக்கழக சமூக பணி மாணவர்கள் குமார், கமலி ஆகியோரும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மராட்டிய மாநில போலீசாரை தொடர்பு கொண்டு மூதாட்டி ஜெயநூர் பற்றிய தகவல்களை தெரிவித்தனர்.

போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு உறவினர்களை கண்டறிந்து ஜெயநூர் குறித்த தகவல்களை அவர்களிடம் தெரிவித்தனர். இதனால் அவருடைய குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். உடனே ஜெயநூரின் மருமகளும், அண்ணன் மகனும் நேற்று புதுச்சேரிக்கு ரெயில் மூலமாக வந்தனர். ஒலந்தரியா நிறுவனத்திற்கு வந்த அவர்கள் ஜெயநூரை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ஜெயநூர் 25 ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறாரா? என்பது தெரியாமல் இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடன் அவரை ஊருக்கு அழைத்து சென்று தேவையானதை செய்து கொடுப்போம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com