வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பால் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது
Published on

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சுப்பிரமணி தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 43). இவர், சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (41).

தங்கதுரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஜெயலட்சுமி, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் கூறி தனது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருகம்பாக்கம் போலீசார், ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜெயலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் மகேஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார், ஜெயலட்சுமியின் கணவர் தங்கதுரையிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து ஜெயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக தங்கதுரை மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com