4 நாட்களாக வராததால் அரசு டவுன் பஸ்சை மாணவ, மாணவிகள் சிறைபிடிப்பு

சூளகிரி அருகே, 4 நாட்களாக ஊருக்குள் வராததால் அரசு டவுன் பஸ்சை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 நாட்களாக வராததால் அரசு டவுன் பஸ்சை மாணவ, மாணவிகள் சிறைபிடிப்பு
Published on

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 3-ஏ என்ற அரசு டவுன் பஸ், சூளகிரி, உலகம், போகிபுரம் ஆகிய ஊர்களின் வழியாக அஞ்சாலம் கிராமத்திற்கு சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இந்த பஸ், அஞ்சாலம் கிராமத்திற்கு வந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

அஞ்சாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போகிபுரம், சூளகிரி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களாக டவுன் பஸ் ஊருக்குள் வராததால் அவர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று போகிபுரத்தில் பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவியர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை போகிபுரம் வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து, சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகளும், சூளகிரி போலீசாரும் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அஞ்சாலம் பகுதியில் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால், பஸ்சை அங்கு ஓட்டிச்செல்ல முடியவில்லை என்று டிரைவர் மற்றும் கண்டக்டர் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், பள்ளத்தை மூடி, பஸ் வழக்கம்போல் சென்று வர, நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com