கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு கிணற்றில் மோட்டாரை பழுது பார்த்தபோது பரிதாபம்

கோவில்பட்டி அருகே கிணற்றில் மோட்டாரை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு கிணற்றில் மோட்டாரை பழுது பார்த்தபோது பரிதாபம்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கிணற்றில் மோட்டாரை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் ராமலிங்கபுரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்துகனி (வயது 52). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், பழுதடைந்த மின்மோட்டாரை பழுதுநீக்க சென்றார்.

முத்துகனி கிணற்றுக்குள் இறங்கி, அங்கிருந்த மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய முத்துகனியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துகனியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி இறந்த முத்துகனிக்கு லட்சுமி (48) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com