என்ஜினீயரிங் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

செய்யாறு கலைக்கல்லூரி மைதானத்தில் என்ஜினீயரிங் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
என்ஜினீயரிங் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Published on

செய்யாறு,

தேர்வு பயத்தில் என்ஜினீயரிங் மாணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்வின்குமார் (வயது 20), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

தற்போது கல்லூரியில் தேர்வு நடப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அஸ்வின்குமார், செய்யாறுக்கு வந்திருந்தார். நேற்று காலை 6 மணியளவில் செய்யாறு அரசுக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அங்கு ஏராளமானோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் 6.30 மணியளவில் அஸ்வின்குமார் திடீரென தன் உடல்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.அப்போது அங்கு நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர்.

அவர்கள் அஸ்வின்குமார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com