

தென்காசி,
தென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கிழக்கு பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு பலர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு விற்கப்படும் மீன்களில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக சிலர் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் செய்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், நெல்லை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின்படி தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர் ஹக்கீம் தலைமையில் அலுவலர்கள் அப்துல்காதர், மகேஸ்வரன், காசிம் ஆகியோர் நேற்று காலை 7 மணியளவில் தென்காசி மீன் சந்தையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கடைகளில் இருந்த மீன்களை எடுத்து பார்த்தனர். அதில் சில கடைகளில் அழுகிய மீன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 115 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என்று கூறப்படுகிறது.