கணவன்-மனைவி பரிதாப சாவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கணவன்-மனைவி பரிதாப சாவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
Published on

நெல்லை,

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் துறையூர் மின் நிலைய பகுதியில் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது இவர்களுக்கு பின்னால் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக முருகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து முருகன், அவரது மனைவி பேச்சியம்மாள் ஆகியோர் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சம்பவ இடத்தில் பலியான முருகன் உடலும் பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்து போன தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com