நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடவில்லை. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்கக்கோரி நேற்று தி.மு.க. சார்பில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாநில சாலைகள், தேசிய சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது மழை காலம் என்பதால் சேதமடைந்த சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதில் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகின்றன. இப்படி மக்கள் அவதிப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இனியும் மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை செப்பனிடாவிட்டால், வருகிற 23-ந் தேதி டெரிக் சந்திப்பிலும், 25-ந் தேதி செட்டிகுளம் சந்திப்பிலும், 28-ந் தேதி வடசேரி கிருஷ்ணன்கோவில் சந்திப்பிலும் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். மேலும் 30-ந் தேதியன்று தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் மகேஷ், அணி அமைப்பாளர்கள் ராஜன், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com