

புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் தலைமை செயலர் அஸ்வனிகுமார் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனாவின் 2-ம் அலையை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் சதவீதத்தை அதிகப்படுத்துதல், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் நிலை மற்றும் அதற்கான தேவைகள், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சுகாதார செயலர் அருண், வருவாய் துறை செயலர் அசோக்குமார், கவர்னர் தனி செயலர் அபிஜித் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் ஸ்ரீராமலு, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இயக்குனர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.