கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்; விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்; விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

மதுரை,

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23), கடந்த 2015-ம் ஆண்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இறப்பு குறித்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். நாமக்கல் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நேற்று நீதிபதி மீராசுமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய யுவராஜ், செல்வ குமார், சந்திரசேகரன், சங்கர், ரகு என்ற ஸ்ரீதர், குமார் என்ற சிவகுமார், அருண்செந்தில், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, ரஞ்சித் உள்பட 15 பேர் ஆஜரானார்கள்.

பின்னர் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், யுவராஜை மட்டும் திருச்சி சிறையில் அடைக்கவும், ஜாமீனில் உள்ள செல்வராஜை தவிர மற்றவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com