கொட்டும் மழையில், இறந்தவரின் உடல் எரிப்பு மயான கொட்டகை இல்லாததால் அவலம்

மத்தாளிப்பட்டியில் மயான கொட்டகை இல்லாததால் வெட்டவெளியில் கொட்டும் மழையில் பேனரை தூக்கி பிடித்தப்படி இறந்தவரின் உடலை எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொட்டும் மழையில், இறந்தவரின் உடல் எரிப்பு மயான கொட்டகை இல்லாததால் அவலம்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கலியராயன்விடுதி ஊராட்சியில் மத்தாளிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான ஆதிதிராவிடர் சமூக குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களது உடலை தகனம் செய்வதற்கு மயான கொட்டகை ஏதும் இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை வெட்ட வெளியில் எரியூட்டும் நிலை உள்ளது.

மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை முழுவதுமாக தகனம் செய்ய முடியாமலும், இறுதி சடங்குகளை முறையாக செய்ய முடியாமலும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மத்தாளிப்பட்டி கிராமத்திற்கு மயான கொட்டகை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையில் மயானவசதி கூட இல்லாத கிராமம் என்பதற்கு எங்கள் கிராமமே உதாரணம். இறந்த முதியவர் ஒருவரின் உடலை வெட்ட வெளியில் எரியூட்டினோம். மறுநாள் சென்று பார்த்தபோது மழையில் நனைந்ததால் முதியவரின் உடல் சரியாக எரியாமல் இருந்தது. இதனால் அந்த முதியவரின் உறவினர்கள் பெரும் வேதனை அடைந்தனர். இதையடுத்து கொட்டும் மழையில் விளம்பர பேனரை தூக்கி பிடித்தப்படி முதியவரின் உடலை மீண்டும் எரியூட்டினோம். இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம மேம்பாட்டு திட்டம், எம்.பி., எம்.எல்.ஏ., நிதிகளின் மூலம் மயானவசதிகள் மேம்படுத்த பட்டு வரும் நிலையில், மயான கொட்டகை இல்லாத மத்தாளிப்பட்டி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com