

தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவில் நேற்று நடந்தது. திருக்கனூர்பட்டி விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசலில் இருந்து சிறிது தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதே போல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாதபடி தடுக்க இரும்பு தடுப்புக்கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே கொண்டு வரப்பட்டன. மாடு பிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். மாடு பிடி வீரர்களுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் 11 டாக்டர்கள் மற்றும் 65 செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் காளைகளை அடக்க வந்திருந்த வீரர்கள் மது அருந்தி உள்ளார்களா? அல்லது புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது. தகுதியில்லாத வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மாடுபிடிக்க தகுதியான வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதைப்போல காளைகளுக்கு கால்நடை துறை இணை இயக்குனர் மாசிலாமணி தலைமையில் 2 துணை இயக்குனர்களும், 6 கால்நடை டாக்டர்களும், 12 உதவி பணியாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் துரைக்கண்ணு கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் அந்தோணியார் கோவில் காளை திறந்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின், வரிசையாக ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட அவைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. ஒரு காளையை ஒருவீரர் மட்டுமே அடக்க வேண்டும். மாறாக குழுவாக சேர்ந்து அடக்கினால், பரிசு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் சில காளைகளை நெருங்கவே முடியவில்லை. அவை தன்னை நெருங்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கி பந்தாடின. அப்போது இரும்பு தடுப்புக்கம்பிகளின் மீது வீரர்கள் ஏறி நின்று கொண்டனர். அடக்க வந்த வீரர்களை சில காளைகள் முட்டி தள்ளின.
அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, குடை, எவர் சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், ரொக்கம் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. காளைகளுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுகளை அதன் உரிமையாளர்கள் பெற்று சென்றனர். 350 வீரர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டையொட்டி தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 680 காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடு பிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் காயம் அடைந்தனர். மொத்தம் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 20 பேர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதி உள்ளவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க தனி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு தொடக்க நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.