கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை: கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு கலெக்டர் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டை கலெக்டர் கிரண்குராலா நேற்று ஆய்வு செய்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை: கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு கலெக்டர் ஆய்வு
Published on

கள்ளக்குறிச்சி,

உலக நாடுகளையே இன்று அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியாகி உள்ளனர். 85 பேர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டுகளை அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த வார்டில் சிகிச்சை அளிக்கும் போது டாக்டர்கள் அணியக்கூடிய முகக்கவசம், பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் பார்வையாளர்கள், நோயாளிகள் அணியக்கூடிய முகக்கவசம் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுவாசகருவி (வென்டிலேட்டர் மெஷின்) உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

இதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு வார்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்களையும், நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அணியக்கூடிய முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு கவச உடைகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, டாக்டர்கள் பழமலை, செந்தில்ராஜா மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com