காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
Published on

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதையொட்டி, இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 19-ந்தேதி கருடசேவை திருவிழா நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனைகள் காட்டினர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரி செல்வம், நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், வை.முருகேசன், ஆ.குமரன், சோ.செந்தில்குமார், மா.வெள்ளைச்சாமி, பா.கவிதா உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக, காஞ்சீ சங்கர மடம் அருகே சென்றது. பிறகு 4 ராஜவீதிகள் வழியாக தேர் மீண்டும் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com