கும்பகோணம் அருகே பரிதாபம்: 18 ஆடுகள் தீயில் கருகி சாவு

கும்பகோணம் அருகே 18 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.
கும்பகோணம் அருகே பரிதாபம்: 18 ஆடுகள் தீயில் கருகி சாவு
Published on

கபிஸ்தலம்,

ராமநாதபுரம் மாவட்டம் கடாலடியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 41). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் பகுதியில் ஆட்டு மந்தை அமைத்துள்ளார். இந்த மந்தையில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை அவர் வளர்த்து வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல் தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

நடக்க முடியாத ஆடுகள், குட்டிகள், சினை பிடித்துள்ள ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லாமல் மந்தையில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஆட்டு மந்தை அருகே உள்ள அறுவடை முடிந்த ஒரு வயலை சுத்தம் செய்வதற்காக தீ வைத்துள்ளனர். இந்த தீ மள மளவென ஆட்டு மந்தைக்கு பரவியது. ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டி தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் பட்டியில் இருந்து வெளிவரமுடியாத நிலையில் இருந்த 18 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. மேலும் மந்தையில் இருந்த வலை, கொட்டகை ஆகியவையும் தீயில் கருகி நாசமாயின.

இந்த தீ விபத்தில் ஆடுகள் மற்றும் மந்தையில் இருந்த பொருட்கள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com