

கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குருவனூத்து பாலம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் சிறுபுனல் நீர்மின் நிலைய தடுப்பணையையொட்டி 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. உடனே கூடலூர் தெற்கு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றினர்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் கையில் இரட்டை இலை சின்னம் மற்றும் எம்.ஜி.ஆர். என பச்சை குத்தப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.