14 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு சிறை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

14 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு சேலம் மகளிர் கோர்ட்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
14 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு சிறை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு, சேலம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பெண் காய்கறி வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடைய 14 வயது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சக்தி, பெண் காய்கறி வியாபாரிடம் கேட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் காய்கறி வியாபாரி தனது மகளுக்கு சக்தியுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் சிறுமியை அழைத்து கொண்டு சேலம் அருகே அதிகாரப்பட்டியில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து சிறுமிக்கும், சக்திக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் குறித்து இரு வீட்டாரின் தரப்பில் உறவினர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனிடையே சிறுமிக்கு 18 வயது ஆகாமலேயே கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளது தொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ததற்காக சக்தி, அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரான மோகன் (23) மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சக்தி மற்றும் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டு சிறை, மோகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கும் மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நீதிபதி விஜயகுமாரி பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com