தென்காசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளிக்கூட மாணவன் பலி - 4 பேர் படுகாயம்

தென்காசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளிக்கூட மாணவன் பலி - 4 பேர் படுகாயம்
Published on

தென்காசி,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழபாட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் பச்சாத்தன் மகன் ரகு (வயது 16). இவன் கீழப்புலியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவருடைய தங்கை ரஞ்சினி (13). இவளும் அதே பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவர்களுடைய உறவினர் அதே ஊரை சேர்ந்த ராமர் மகன் ஜெய்சன் ஜோயல் (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று காலையில் ஜெய்சன் ஜோயல் தனது மோட்டார் சைக்கிளில் ரகு, ரஞ்சினியை ஊரில் இருந்து பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். இதேபோல் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி (46), கீழப்புலியூரை சேர்ந்த வேலுசாமி (59) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

கீழப்புலியூர் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரகு பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 4 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ரகு உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பள்ளிக்கூட மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com