

சேலம்,
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 17). அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தமிழரசன்(17), மாரிமுத்து மகன் சந்தோஷ் (17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் அம்மாபேட்டையில் உள்ள ஒரு குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் வீராணம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது வேகமாக மோதியது.
இதில் சிறுவர்கள் 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார். சந்தோசுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.