மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு
Published on

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி மற்றும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையொட்டி வருசநாடு , கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் மூலவைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதேபோல கனமழை காரணமாக மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை ஓடை, கருப்பையாபுரம் ஓடை மற்றும் கடமலைக்குண்டுவில் பாலூத்து ஓடை, கன்னிமார்கோவில் ஓடை உள்ளிட்டவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிறப்பாறை ஓடை முத்தாலம்பாறை-மயிலாடும்பாறை பிரதான சாலையின் குறுக்கே நேருஜிநகர் என்ற கிராமம் அருகே செல்கிறது. இந்த பகுதியில் தரைப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று காலை சிறப்பாறை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முத்தாலம்பாறை சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பஸ் மற்றும் கல்லூரி வாகனங்கள் சிறப்பாறை மற்றும் தங்கம்மாள்புரம் கிராமங்கள் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com