தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் 13-ந் தேதி சிவசேனாவில் சேருகிறார் - அவரே வெளியிட்ட தகவல்

வருகிற 13-ந் தேதி சிவசேனாவில் சேரப்போவதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் அறிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் 13-ந் தேதி சிவசேனாவில் சேருகிறார் - அவரே வெளியிட்ட தகவல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொங்கன் மண்டலத்தின் முக்கிய தலைவரும், முன்னாள் மந்திரியுமான பாஸ்கர் ஜாதவ் தனது எதிர்கால திட்டம் குறித்து ரத்னகிரி மாவட்டம் குகாகரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினேன். அப்போது அவர் சிவசேனாவில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்தேன். கூட்டத்தில் சிவசேனாவில் இணைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் வருகிற 13-ந் தேதி எனது ஆதரவாளர்களுடன் அந்த கட்சியில் இணைய உள்ளேன். வருகிற தேர்தலில் குகாகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். ஆனால் நான் போட்டியிடுவது குறித்து சிவசேனா கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். எது எப்படி இருந்தாலும் சிவசேனாவில் சேருவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மந்திரியான பாஸ்கர் ஜாதவ் தனது அரசியல் வாழ்வை சிவசேனாவில் தான் தொடங்கினார். கடந்த 2000-ம் ஆண்டு அவர் சிவசேனாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு காங்கிரஸ்- தேசிவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தார்.

தற்போது அவர் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவசேனாவில் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com