அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் கிராம பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் அரக்கோணம்-ஓச்சேரி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகர், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் சரிவர வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் குடிநீர் ஏற்ற பயன்படும் மோட்டார் பழுது ஏற்பட்டு உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த மோட்டாரை சரி செய்ய அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம்-ஓச்சேரி நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com