பெங்களூரு அருகே குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த பெண் வெட்டிக் கொலை கணவர் கைது

பெங்களூரு அருகே குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு அருகே குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த பெண் வெட்டிக் கொலை கணவர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அருண். இவரது மனைவி யோகஸ்ரீ (வயது 27). அருண் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர். யோகஸ்ரீ சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூரை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தனர். இந்த தம்பதிக்கு 1 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அருண் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து தனது மனைவி யோகஸ்ரீயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சூர்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து யோகஸ்ரீயின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதும், அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரத்தில் யோகஸ்ரீயை அருண் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com