பனப்பாக்கம் அருகே தொண்டையில் இரும்பு கம்பி குத்தி 1½ வயது குழந்தை சாவு

பனப்பாக்கம் அருகே இரும்பு கம்பியை வாயில் வைத்து 1½ வயது குழந்தை விளையாடிய போது தொண்டையில் குத்தி பரிதாபமாக உயிரிழந்தது.
பனப்பாக்கம் அருகே தொண்டையில் இரும்பு கம்பி குத்தி 1½ வயது குழந்தை சாவு
Published on

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த கோடம்பாக்கம் ஊராட்சி கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜமுனா (30). இவர்களுக்கு அரவிந்த் (4), யோகேஷ் (1) ஆகிய 2 மகன்கள்.

மூர்த்தி அதேபகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு யோகேஷ் அந்த வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து, வாயில் அடி நீள இரும்பு கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென யோகேஷ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதனால் வாயில் இருந்த இரும்பு கம்பி தொண்டையில் குத்தி வெளியே வந்தது. வலியால் யோகேஷ் அழுதான். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர்.

அப்போது குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி குத்தி வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி குத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com