சேலம் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்

சேலம் அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
சேலம் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சி பெரியப்பட்டி கருங்கரடு பெரியண்ணன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, விவசாயி. இவருடைய மகன் ருத்ரமூர்த்தி (வயது 12). அதே பகுதியை சேர்ந்தவர் வேங்கையன். இவரின் மகன் விஷ்வா (12).

சிறுவர்களான ருத்ரமூர்த்தியும், விஷ்வாவும் பெரியப்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் அதே பகுதியில் உள்ள செந்தில்குமார் என்பவரின் விவசாய தோட்டத்து கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றனர். அங்கு அவர்கள் கிணற்றின் அருகே ஆடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குதித்து உள்ளனர்.

ஆனால் நீச்சல் சரியாக தெரியாததால் எதிர்பாராவிதமாக மாணவர்கள் இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டனர். அதே நேரத்தில் மதியம் வீட்டை விட்டு சென்ற மாணவர்கள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

இரவு 9 மணியளவில் கிணற்றின் அருகே அந்த சிறுவர்களின் செருப்பு மற்றும் உடைகள் இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு சென்ற அந்த மாணவர்களின் பெற்றோர் கிணற்றின் அருகே கிடந்த துணி மற்றும் செருப்பு தங்களின் மகன்களுக்கு உரியது தான் என உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து மாணவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதிய அவர்கள், காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்கு முன்பே அந்த பகுதி இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து மாணவர்கள் ருத்ரமூர்த்தி, விஷ்வா ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடல்களை கைப்பற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com