தென்காசி அருகே தீ விபத்தில் உடல் கருகிய 2 தொழிலாளர்கள் சாவு மேலும் 2 பேருக்கு தொடர் சிகிச்சை

தென்காசி அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி அருகே தீ விபத்தில் உடல் கருகிய 2 தொழிலாளர்கள் சாவு மேலும் 2 பேருக்கு தொடர் சிகிச்சை
Published on

தென்காசி,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரை சேர்ந்தவர் சிவ்கான் படேல். இவருக்கு தென்காசி அருகே உள்ள வல்லத்தில் மஞ்சள்பொடியில் இருந்து ரசாயனம் தயாரித்து, அதை மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் வழக்கம்போல் ரசாயனம் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இந்த பயங்கர தீ விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களான வல்லத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 45), செங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (32), பிரானூர் பார்டர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (21), காவலாளியாக வேலை பார்த்து வந்த காசிமேஜர்புரம் சின்னத்தம்பி கோவில் தெருவை சேர்ந்த செண்பகம் (84) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

அவர்கள் 4 பேரையும் குற்றாலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த செண்பகம் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com