உடன்குடி அருகே பரபரப்பு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது

உடன்குடி அருகே அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடன்குடி அருகே பரபரப்பு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது
Published on

உடன்குடி,

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவரது வீடு உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ளது. இவர் தனது காரை நேற்று முன்தினம் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தட்டார்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது ஊரான சொக்கன்குடியிருப்புக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் மாலை சென்று இருந்தார்.

அப்போது நள்ளிரவில் தண்டுபத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் காரை மர்மநபர்கள் கம்பால் அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கார் டிரைவரான திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தை சேர்ந்த அந்தோணி சேவியர், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் மற்றும் மெஞ்ஞானபுரம் போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் அவர்கள், அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடியை உடைத்ததாக தண்டுபத்தை சேர்ந்த செல்வநாதன் (வயது 41), காயல்பட்டினத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜின்னா (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com