

ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு பெட்ரோல் போடுவதற்காக ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தனர். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, 200 ரூபாய் நோட்டை எடுத்து அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்தனர்.
அதனை வாங்கி பார்த்த ஊழியர் சந்தேகம் அடைந்து, தனது உரிமையாளரான செல்வகிருஷ்ண மோனிஷா (வயது 23) என்பவரிடம் கூறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துமலை போலீசார் விரைந்து வந்தனர். 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள குலையநேரி வடக்கு தெருவை சேர்ந்த கந்தையா மகன் ராஜா (30), துர்க்கையாண்டி மகன் முத்துக்கிருஷ்ணன் (32), கம்மாவூர் நடுத்தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி (55) என்பதும், 200 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பதும் தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், மேலும் அவர்கள் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டையும் கைப்பற்றினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கூலி தொழிலாளர்களான அவர்களிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.