

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தையிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கனகசபாபதி தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 29). இவர் அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பழனிவேல் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு 1 வயதில் அக்ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் அக்ஷயா, வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென அவள் அழுகை சத்தம் கேட்டு பழனிவேல், செண்பகவள்ளி ஆகியோர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துகொண்டு தப்பி சென்றார். அவரை பழனிவேல் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து பழனிவேல், தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.