அ.கோம்பையை தனி ஊராட்சியாக உருவாக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

அ.கோம்பையை தனி ஊராட்சியாக உருவாக்கக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அ.கோம்பையை தனி ஊராட்சியாக உருவாக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
Published on

திண்டுக்கல்,

அய்யலூர் பேரூராட்சி பகுதியில் பஞ்சந்தாங்கி, காக்காயன்பட்டி, அ.கோம்பை, புதூர், துப்பாம்பட்டி, பாலத்தோட்டம் உள்பட 15 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. ஒரு நூலகம் கூட இல்லை. மேலும், பேரூராட்சியாக இருப்பதால் ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, அய்யலூர் பேரூராட்சியை பிரித்து ஆர்.கோம்பையை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி உருவாக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால், பேரூராட்சி அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக புறப்பட்டனர்.

அய்யலூரில் இருந்து பேரணியாக புறப்பட்ட பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்குள்ள அண்ணா திடலில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதையடுத்து அங்கு வந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்பேரில், கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலெக்டர் டி.ஜி.வினய், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆர்.கோம்பையை தனி ஊராட்சியாக உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com