

மதுரை,
மதுரை செல்லூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூ.6 லட்சம் கொள்ளை
மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசிமாயன். இவருடைய மனைவி மேகலா (வயது 37). இவர், கடந்த 14-ந் தேதி வீட்டின் கதவை பூட்டிவிட்டு பழனிக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க தகவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்கம், 22 கிராம் தங்க நகை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து மேகலா அளித்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
போலீசார் கூறுகையில், "காசிமாயன் விபத்தில் இறந்து விட்டதால் அவருடைய இன்சூரன்ஸ் பணம் ரூ.8 லட்சம், கடந்த 10-ந்தேதி வங்கி கணக்கிற்கு வந்தது. அந்தப் பணத்தில் ரூ.2 லட்சத்தை எடுத்த மேகலா அதனை வைத்து சிறுசிறு கடன்களை அடைத்தார். மீதம் உள்ள 6 லட்சம் ரூபாயை பீரோவில் வைத்து இருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தில் மகளுக்கு நகை வாங்கி திருமண ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படியே பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். அந்த சமயத்தை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம். அந்த ஆசாமிகளை தடி வருகிறோம்" என்றனர்.