

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி நிங்கணாங்காடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி மூலப்பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பூபதியை கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.