திருத்துறைப்பூண்டியில், சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில், சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு
Published on

திருத்துறைப்பூண்டி,

முத்துப்பேட்டை பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கடந்த 29-ந் தேதி தமிழக அரசின் சுகாதாரத்துறையின் சார்பில் மாத்திரைகள் வழங்கப் பட்டன. அதை சாப்பிட்ட பேட்டை தட்டாரத்தெருவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பேட்டைசிவா அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர் அரவிந்துக்கும், பேட்டைசிவாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு மாத்திரை சாப்பிட்டு வாந்தி எடுத்த 8-க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

இதுகுறித்து முத்துபேட்டை போலீசில் டாக்டர் அரவிந்த் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டை சிவாவை நேற்றுமுன்தினம் கைது செய்து அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்பு அவரை சிறைச்சாலைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வேனில் ஏற்றியபோது கோர்ட்டு வாசலிலேயே போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். பின்பு அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து பழைய பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சி நகர தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, மாவட்ட பொதுச்செயலாளர் ராகவன், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் ஹபிப்முகமது உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com