இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு எடுத்து சென்ற அவலம்

வாய்மேடு அருகே ஆற்றை தாண்டி எடுத்து செல்ல பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். மேலும் பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்தவர் உடலை கழுத்தளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு எடுத்து சென்ற அவலம்
Published on

வாய்மேடு,

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி மலையான் குத்தகை தெற்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்து போனால், அவரது உடலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள வளையம்பலம் வடிகால் வாய்க்காலை கடந்து தெற்கு கரையில் உள்ள சுடுகாட்டில் தான் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும். தற்போது அந்த வடிகால் வாய்க்கால் அரசு அறிவித்ததின்பேரில் அந்த பகுதியை சேர்ந்து பொதுமக்கள் தூர்வாரி மண் எடுத்தனர். இதனால் தற்போது இந்த வடிகால் வாய்க்கால் ஆழம் அதிகரிக்கப்பட்டு 5 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் மலையான் குத்தகை தெற்கு பகுதியை சேர்ந்த தர்மன் (வயது88) கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து வளையம்பலம் வடிகால் வாய்க்காலில் தேங்கியுள்ள கழுத்தளவு தண்ணீரில் தர்மனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் எடுத்து சென்றனர். பின்னர் சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது மலையான் குத்தகை பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் வாய்க்காலை கடந்து உயிரை பணயம் வைத்துதான் இறுதி சடங்கு செய்து வருகிறோம். மழை வெள்ள காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவு செல்லும்போது பிணங்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதால் ஆழமும் அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் மழைவெள்ளம் ஏற்பட்டால் பிணத்தை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவே அரசு இதுகுறித்து பரிசீலனை மேற்கொண்டு வாய்க்காலை கடந்து செல்ல பாலம் கட்டித்தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com