மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் சாவு கிராமமே சோகத்தில் மூழ்கியது

மணப்பாறை அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் சாவு கிராமமே சோகத்தில் மூழ்கியது
Published on

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பாப்பம்மாள். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள், 2 மகள்கள். இதில் பட்டதாரியான இளைய மகன் திருப்பதி (43), சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. திருப்பதிக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இறந்தார். அப்போது திருப்பதியின் தந்தை மாரியப்பன் அருகில் உள்ள கைகாட்டியில் இருந்தார். அவரிடம் தகவல் சொல்வதற்காக மற்றொரு மகன் சென்றிருந்தார். திருப்பதி இறந்து விட்டார் என்று சொன்னால் தந்தை அதிர்ச்சி அடைந்து விடுவார் என்று கூற மறுத்து, திருப்பதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது உடனே வாருங்கள் என்று கூறி அவரை அழைத்து வந்தார்.

வீட்டின் அருகே அவர்கள் வந்தபோது, திருப்பதி இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் மாரியப்பன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. தந்தை-மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலரும் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டன. மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவத்தால் அவர்கள் வசித்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com