

பனவடலிசத்திரம்,
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள களப்பாளங்குளம் ஊரைச் சேர்ந்தவர் அருணாசலம். அவருடைய மகன் ராஜூ (வயது 30). இவர் கழுகுமலையில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஆட்டோ ஓட்டி விட்டு, இரவில் அதே ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச்சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்னுப்பாண்டி (30) என்பவரும் வந்தார். களப்பாளங்குளம் ஊருக்கு அருகே வந்தபோது ஆட்டோ திடீரென நிலை தடுமாறியது. இதனால் ரோட்டின் அருகே இருந்த கால்வாய்க்குள் ஆட்டோ பாய்ந்தது. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
பரிதாப சாவு
பலத்த காயம்அடைந்த ராஜூவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கழுகுமலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ராஜூ பரிதாபமாக இறந்தார். பொன்னுப்பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அய்யாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த ராஜூவுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், கவினேஷ் என்ற மகனும் உள்ளனர்.