டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் வீடுகளை இடித்து புகுந்தது

நாட்டறம்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் வீடுகளை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் வீடுகளை இடித்து புகுந்தது
Published on

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளி அருகே உள்ள பி.பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் (வயது 40), ரங்கநாதன் (41). இவர்கள் 2 பேரும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை 7 மணி அளவில் இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரவிக்குமார், ரங்கநாதன் மீது மோதுவது போல் வந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், ரங்கநாதன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி உயிர் தப்பினர்.

பின்னர் அந்த பஸ்சானது ரவிக்குமார், ரங்கநாதன் ஆகிய 2 பேரின் வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் வீடுகளை இடித்துக்கொண்டு புகுந்தது. மோதிய வேகத்தில் வீட்டின் சுற்றுச்சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் அருண் (40) மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஷாலினி, ராகுல், நந்தினி, கோவிந்தராஜ், நிஷா உள்பட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com