வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
Published on

நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சி காசிபாளையம் அருகே ஜெ.ஜெ.நகர், பள்ளக்காட்டு காலனி உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு செல்லும் வழித்தடத்தில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் ஒரு அடி உயரத்திற்கு தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இது குறித்து கலெக்டர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாக்கடை நீரை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, பழனிச்சாமி உள்ளிட்ட போலீசார் சாலை மறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் சுப்பிரமணியம், நல்லூர் வருவாய் ஆய்வாளர் பத்மப்ரியா, கிராம நிர்வாக அலுவலர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றி வழித்தடம் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் ஓடை செல்ல தனியாரிடம் பேசி இடம் பெற்ற பின்னர் பொதுமக்கள் கேட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com