துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்

குறைந்தபட்ச ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணிபுரிபவர்களில் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக துப்புரவு தொழிலாளர்கள் கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் முறையான ஊதியம் வழங்ககோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு குறைந்த பட்ச ஊதிய மறுநிர்ணயக்குழு அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 1.10.2017 அன்று குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் நகராட்சி பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தலா ரூ.509-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.432-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.355-ம், டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு ரூ.432-ம் வழங்க வேண்டும். இந்த ஒருநாள் ஊதியத்தை 26- ஆல் பெருக்கி மேற்கண்ட தொழிலாளர்களின் மாத ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல் படுத்தி அதன் அடிப்படையில் முறையான ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com