தாயாருடன் ஆடு மேய்க்க சென்ற போது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாயாருடன் ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
தாயாருடன் ஆடு மேய்க்க சென்ற போது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு
Published on

பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி மகேஷ். இவர்களுக்கு மணிகண்டன் (வயது 12), நந்தகுமார் (10) என்ற 2 மகன்கள் இருந்தனர். மணிகண்டன் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், நந்தகுமார் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். கோவிந்தன் ஆடுகள் வளர்த்து வருகிறார். இதனை மகேஷ் மேய்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மகேஷ் ஆடுகளை பறைப்பட்டி ஏரிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் மணிகண்டன், நந்தகுமார் ஆகிய 2 பேரும் தாயாருடன் ஏரிக்கு சென்றனர். அப்போது மாணவர்கள் மணிகண்டன், நந்தகுமார் ஆகியோர் மற்ற சிறுவர்களுடன் ஏரியில் குளிக்க சென்றனர். இதில் நந்தகுமார் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய மாணவனை தேடினர். அப்போது மாணவன் நந்தகுமார் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மாணவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மகனின் உடலை பார்த்து மகேஷ் கதறி துடித்தார்.

பின்னர் போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com