பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி

பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்களுக்கு உதிரிபாகங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி
Published on

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் 2020-21-ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி கடந்த ஜூலை மாதம் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி அவர்களது மடிக்கணினியில் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலம் அவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கொரோனா நோயின் தாக்கம் முற்றிலும் குறைந்ததும் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் சென்னையில் இருந்து பெறப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 124 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-1 மாணவ- மாணவிகள் 16,535 பேருக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் வந்துள்ளன.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு வந்துள்ள சைக்கிள்களின் உதிரிபாகங்களை ஊழியர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்ததும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்பட்டு பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com