

தூத்துக்குடி,
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பேராலயம் ஆகும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அன்னையை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடியேற்றத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் கொடிபவனி ரத்து செய்யப்பட்டது.
இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. இதில் பிஷப் மற்றும் முக்கிய பங்குதந்தைகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.