திருப்பூர் அருகே தம்பதி கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருப்பூர் அருகே தம்பதி கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்புக் கூறியது.
திருப்பூர் அருகே தம்பதி கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

திருப்பூர்,

திருப்பூர் அருகே உள்ள மானூர் ரெட்டியார் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(வயது 69). இவருடைய மனைவி வள்ளியம்மாள்(55). இவர்கள் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் அருகே உறவினர்களான விவசாயம் செய்து வரும் ரகுவரன்(26) மற்றும் அவருடைய சகோதரர் மகேஸ்வரன்(28) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் பழனிசாமி குடும்பத்தினருக்கும் ரகுவரன் குடும்பத்தினருக்கும் இடையே பாதை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இதில் ஆத்திரம் அடைந்த ரகுவரனும், மகேஷ்வரனும் சேர்ந்து, தம்பதியினரான பழனிசாமி, வள்ளியம்மாள் ஆகியோரை கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தினால் மன உளைச்சலில் இருந்த மகேஷ்வரன் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரட்டை கொலை குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது ஜியாபுதீன் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி இந்த வழக்கில் ரகுவரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து ரகுவரனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com