சாலையில் நடந்து சென்றவர் பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவர் பஸ்சில் அடிபட்டு சாவு

தஞ்சையில், சாலையில் நடந்து சென்றவர் பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவர் பஸ்சில் அடிபட்டு இறந்தார்.
சாலையில் நடந்து சென்றவர் பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவர் பஸ்சில் அடிபட்டு சாவு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ளது காவேரி நகர். நேற்று இரவு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் திடீரென சாலை ஒரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினார்.

அந்த நேரத்தில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவர் எதிர்பாராதவிதமாக பஸ்சில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பணத்தை பறிகொடுத்தவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com