மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் கண்மாய்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Published on

காரைக்குடி,

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சிடையந்தனர். சிவகங்கை பகுதியில் நேற்று அதிகாலை சிறிது நேரம் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் மதியம் பலத்த மழை பெய்ததால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று அதிகாலை முதலே பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது. தொடர்ந்து மதியம் பலத்த மழை பெய்ததால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் காரைக்குடி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இது தவிர காரைக்குடி சத்யாநகர், காளவாசல் பகுதி, ரெயில்வே, தந்தை பெரியார் நகர் பகுதி உள்ளிட்ட தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழை தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனால் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இதுதவிர மாணவ-மாணவிகள், நனைந்து கொண்டே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். இதேபோல் தேவகோட்டை தாலுகா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று சாரல் மழையாக அவ்வப்போது பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த இந்த பரவலான மழையினால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் இந்தாண்டு நல்ல விளைச்சல் வரும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com