மதுரையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா 4 பேர் உயிரிழப்பு

மதுரையில் மேலும் 450 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபோல், ஒரே நாளில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 390 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

போலீசார், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், 12 கர்ப்பிணிகளும், சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்ட 177 பேரும் அடங்குவர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 4,199 ஆக உயர்ந்திருக்கிறது.

மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மதுரையை சேர்ந்த 65 வயது முதியவர், 56 வயது பெண், 60 வயது பெண், 65 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com