

அமராவதி,
ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டம் அனந்தகிரி மண்டலத்தில் முலகும்மி என்ற அருவி உள்ளது. நேற்று அந்த அருவிக்கு 4 மாணவிகள் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி அருவியில் விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் திரிஷா (வயது 17), ரத்தினகுமாரி(16), பவித்ரா(16) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் அஞ்சலி என்ற மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
அஞ்சலிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஹுக்கும்பேட்டை மண்டலம் லுக்கபர்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவிகள் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.