

சென்னை
கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிட கூடாது என 3 தமிழர்கள் கொலை பற்றி முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவளம் அருகே 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தென்மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் மண்டல ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும். தவிர, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு பகிர்வு (காவிரி நீர் உள்பட), தொகுதி மறுவரையறை விவகாரம், உள்கட்டமைப்பு திட்ட பணிகள் உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்படும்.
இதற்காக, கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் சென்னைக்கு வருகை தருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் இருவரும் நாளை மறுநாள் சென்னையில் சந்தித்து பேச உள்ளனர்.
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், 3 தமிழர்கள் கொலையை தமிழக தலைவர்கள் சட்டசபையில் இன்று கண்டித்து பேசினர். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரி இருந்தனர்.
இந்நிலையில், 3 தமிழர்கள் கொலையை தமிழக தலைவர்கள் கண்டித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டி.கே. சிவக்குமார் பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, இந்த விவகாரத்தில் தமிழகம் தலையிட கூடாது. எந்த மாநிலமும், மற்ற மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்றார்.
தொடர்ந்து அவர், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கென்று சில சிக்கல்கள் உண்டு.
தமிழக தலைவர்கள் யாரும் பிற மாநில விவகாரத்தில் தலையிட முடியாது. தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை. இதேபோன்று எங்களுடைய சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பிற மாநிலங்களும் தலையிட கூடாது. கர்நாடகாவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று அவர் கூறினார்.