

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மேலும் 7 வேட்பாளர்களை பா.ஜனதா தலைமை நேற்று அறிவித்தது. அதன்படி மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பதிலாக சங்கர் லால்வாணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோசி தொகுதியில் அரிநாராயண் ராஜ்பர் போட்டியிடுகிறார்.
டெல்லியில் ஏற்கனவே போட்டியிட்ட 4 பேரும் மீண்டும் அதே தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் மத்திய மந்திரி ஹர்சவர்தன் சாந்தினி சவுக் தொகுதியிலும், மனோஜ் திவாரி டெல்லி வடகிழக்கு தொகுதியிலும், பிரவேஷ் வர்மா டெல்லி மேற்கு தொகுதியிலும், ரமேஷ் பிதூரி டெல்லி தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.