எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

எத்தனால் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

இந்த சூழலில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் உயிரி எரிபொருட்களுக்கான தேவையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், எத்தனால் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஏற்கனவே பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு முன்பே எட்டி விட்டது. தொடர்ந்து பெட்ரோலில் அதிக எத்தனால், அதாவது 30 சதவீதம் வரை பயன்படுத்தும் முறைகளை ஆராய்ந்து வருகிறது.

கலால் வரி விலக்கு

தற்போது நடைமுறையில் உள்ள 'இ20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டத்தையும் கடந்து, பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பதைத் ஊக்குவிக்கும் வகையில், 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு மத்திய அரசு மத்திய கலால் வரி விலக்கை நீட்டித்துள்ளது. இது உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பெட்ரோலுக்கு உரிய வரிகள் செலுத்தப்பட்டு, கலப்புக்கு பயன்படுத்தப்படும் எத்தனாலுக்குப் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரி விலக்குகள் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com